செய்திகள்
கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நெருக்கடிகால மேலாண்மைக்குழு கூட்டம் நடந்த போது எடுத்தபடம்.

அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல 1,754 வாகனங்களுக்கு அனுமதி சீட்டு - கலெக்டர் தகவல்

Published On 2020-04-01 12:12 GMT   |   Update On 2020-04-01 12:12 GMT
அத்தியாவசிய பொருட் களை கொண்டு செல்வதற்கு இதுவரை 1,754 வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
திண்டுக்கல்:

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நெருக்கடிகால மேலாண்மைக்குழு அமைத்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி அரசு உத்தரவிட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள், வர்த்தகர்கள், அரசு மற்றும் தனியார் முகவர்கள், மருந்து மற்றும் உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தினரை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலெக்டர் பேசியதாவது:-

வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 884 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் 924 நிறுவனங்கள், 28 காய்கறி கடைகள், கூட்டுறவுத்துறையின் 2 நிறுவனங்கள் மூலம் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்களின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

அதேபோல் காய்கறிகள், பழங்களை கொண்டு செல்வதற்கு 614 வாகனங்களுக்கும், அத்தியாவசிய பொருட்களுக்கு 970 வாகனங்களுக்கும், உணவு வழங்குவதற்கு 10 வாகனங்களுக்கும், மருந்து பொருட்களுக்கு 20 வாகனங்களுக்கும், இதர பயன்பாட்டுக்கு 140 வாகனங்களுக்கும் அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News