கடந்த 15-ந் தேதி நுங்கம்பாக்கம் விசா மையத்துக்கு சென்றவருக்கு கொரோனா?
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் குட்ஷப்பேடு அடுக்குமாடி கட்டிடத்தில் வெளிநாடுகளுக்கு விசா வழங்கும் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு கடந்த 15-ந் தேதி ஒருவர் விசா பெறுவதற்காக சென்றுள்ளார். அந்த நபருக்கு தற்போது கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.
அவர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த போது இந்த தகவலை தெவித்துள்ளார். அவருக்கு சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர் விசா மையத்துக்கு சென்று 2 மணி நேரத்துக்கு மேலாக அங்கு உட்கார்ந்து கையெழுத்திட்டு வந்து இருக்கிறார். இதனால் அங்கு கொரோனா வைரஸ் அங்காங்கே பரவி இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 15-ந் தேதி நுங்கம் பாக்கத்தில் உள்ள வெளிநாட்டு விசா மையத்துக்கு சென்றுவந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளதால் அந்த இடத்துக்கு அதே நாளில் சென்று வந்த அனைவரும் உடனடியாக தங்களை வீட்டுக்குள்ளே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். எங்களுக்கும் உங்களை பற்றிய விவரங்களை உடனே தெரிவிக்க வேண்டும். அப்போது தான் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க முடியும். எனவே அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.