ஊரடங்கு உத்தரவால் 2 லட்சம் நாடக கலைஞர்கள் வறுமையால் தவிப்பு
கண்ணமங்கலம்:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ள நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைப் பண்பாட்டு துறையில் பதிவுப் பெற்றுள்ள கலைஞர்களுக்கு தலா ரூ.10ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் நியமன செயற்குழு உறுப்பினர் குன்னத்தூர் வாசுதேவன் கோரிக்கை விடுத்ததுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் உள்ள நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் கடந்த சில மாதங்களாக போதிய நிகழ்ச்சிகள் கிடைக்காததால் வருவாய் இல்லாமல் இருந்து வருகின்றனர். இதனால் நாடகக் கலைஞர்கள் குடும்பத்தினர் தற்போது உணவுக்கே கஷ்டப்பட்டு பசியில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே நாடகம் மட்டும் நாட்டுப்புற கலைஞர் களையும் அவர்களின் குடும்பங்களையும் காக்கும் வகையில் தமிழக அரசு 3 மாதங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் வழங்க முன்வர வேண்டும்.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனா நோயால் நாட்டுப்புற கலைஞர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
முடங்கி கிடக்கும் நலவாரியத்தினை மீண்டும் முறையாக செயல்பட வைக்க வேண்டும். இப்படி வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் தமிழகம் முழுவதும் உள்ள நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இந்த ஊரடங்கு காலத்தில் வேலை இல்லை.
எனவே இவர்களுக்கு வாழ்வாதார இழப்பை ஈடு செய்யும் விதத்திலும் அவர்களுடைய குடும்பங்களுக்கு தமிழக அரசு குறைந்தது 3 மாதங்களாவது நிதி உதவி வழங்க வேண்டும்.
தமிழகத்தில் நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் சுமார் 2 லட்சம் பேர் வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கத்தில் அரசு பதிவு பெற்ற 45 ஆயிரம் கலைஞர்கள் உள்ளனர். இவர்களுக்கு வருடத்திற்கு 100 முதல் 120 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும்.
நாடகக் கலைஞர்கள், தங்களை ராஜாவாகவும் வள்ளலாகவும் நாடகங்களில் நடித்து மக்களை மகிழ்வித்து, மக்களிடம் நல்ல கருத்துக்களை கொண்டு சேர்க்கிறோம். ஆனால் இவர்களது குடும்பங்கள் அனைத்தும் வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது நாடக கலைஞர்களின் குடும்ப வாழ்வாதாரம் இன்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளனர்.