செய்திகள்
போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? - கமல் கேள்வி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கமல் ஹாசன், போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை:
கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், இதனை அரசுத் தரப்பு மறுத்துள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார். அதில், “போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்” என கூறி உள்ளார்.
இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தடுப்புக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க ஆர்டர் செய்திருப்பதாகவும் கூறினார்.