செய்திகள்
உழவர் சந்தை வந்த பொதுமக்களை மருத்துவ பரிசோதனை செய்யும் போலீசார்.

ராணிப்பேட்டையில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே காய்கறி வாங்க பொதுமக்கள் அனுமதி

Published On 2020-03-28 10:32 GMT   |   Update On 2020-03-28 10:32 GMT
ராணிப்பேட்டை உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்கள், பரிசோதனைக்கு பின்னரே காய்கறி வாங்க அனுமதிக்கப்பட்டனர்.
சிப்காட்:

ராணிப்பேட்டையில் உள்ள உழவர்சந்தை கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் சாலைஓரங்கள், தெருக்களில் காய்கறிகள் விற்பனை செய்வதை ஒருங்கிணைப்பதற்காக நேற்று உழவர் சந்தை திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காய்கறிகள் வாங்குவதற்காக பொதுமக்கள் உழவர்சந்தைக்கு வந்தனர்.

அவர்கள் காய்கறி வாங்குவதற்கு முன்பு தெர்மல் மீட்டர் மூலம் சோதனை செய்யப்பட்டனர். அதன்பிறகே காய்கறி வாங்குவதற்கு உழவர் சந்தைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். உழவர் சந்தையின் உள்ளேயும் பொதுமக்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நின்று காய்கறிகள் வாங்குவதற்காக, குறியிடப்பட்டிருந்த இடத்தில் நின்று காய்கறிகள் வாங்கி செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

உழவர் சந்தை பகுதி இடம் போதுமானதாக இல்லை. மற்ற காய்கறி வியாபாரிகள் பெரும்பாலானோர் ராணிப்பேட்டை போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலைய சாலை பகுதிகளிலும் காய்கறி விற்பனை செய்தனர். இங்கும் ஏராளமான பொதுமக்கள் கூட்டமாக வந்து காய்கறிகள் வாங்கி சென்றனர்.

உழவர் சந்தையில் போதுமான இடவசதி இல்லாததால் காய்கறி விற்பனையை ராணிப்பேட்டை சந்தை மைதானம் அல்லது ராணிப்பேட்டை அரசினர் பள்ளி மைதானத்திற்கு மாற்றி உரிய பாதுகாப்பு, பரிசோதனைகள் செய்து காய்கறிகள் விற்பனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 
Tags:    

Similar News