செய்திகள்
கன்னியாகுமரி அரசு மருத்துவமனை

கன்னியாகுமரி: கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு

Published On 2020-03-26 04:57 GMT   |   Update On 2020-03-26 04:57 GMT
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கன்னியாகுமரி:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் 26 பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 40 வயது நபர் இன்று காலை உயிரிழந்தார். 

கோடிமுனை பகுதியைச் சேர்ந்த அந்த நபர், குவைத் சென்றுவிட்டு கடந்த 3ம் தேதி நாடு திரும்பியிருகிறார். அவருக்கு மூளைக்காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு இருந்ததது. கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என கன்னியாகுமரி அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரி பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் வந்தபிறகே, அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும்.

தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு மதுரையில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News