செய்திகள்
ப.சிதம்பரம்

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க செய்யவேண்டிய 10 கடமைகள்: அரசுக்கு, ப.சிதம்பரம் யோசனை

Published On 2020-03-26 02:48 GMT   |   Update On 2020-03-26 02:48 GMT
நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை-எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு செய்ய வேண்டிய 10 கடமைகள் குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் யோசனை தெரிவித்துள்ளார்.
சென்னை :

நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை-எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு செய்ய வேண்டிய 10 கடமைகள் குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ‘டுவிட்டரில்’ கூறியிருப்பதாவது:-

* பிரதமர் கிசான் திட்டத்தில் தரும் உதவித்தொகையை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி உடனே வழங்க வேண்டும்.

* குத்தகை விவசாயிகளின் பட்டியல்களை மாநில அரசுகளிடம் இருந்து பெற்று ஒவ்வொரு குத்தகை விவசாயியின் குடும்பத்திற்கும் ரூ.12 ஆயிரம் உடனே வழங்க வேண்டும்.

* மகாத்மா காந்தி வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.3,000 உடனே வழங்க வேண்டும்.

* ஜன்தன் திட்டம் அதனை ஒத்த முந்தைய திட்டங்களில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகள் (நகர்ப்புற வங்கி கிளைகளில் மட்டும்) ஒவ்வொன்றுக்கும் ரூ.3,000 உடனே வழங்க வேண்டும்.

* ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்க வேண்டும்.

* ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தொழில் உரிமையாளர் அனைவரும் தற்போதுள்ள வேலைகளையோ, ஊதியத்தையோ குறைக்கக்கூடாது என்று கட்டளையிட்டு அவர்கள் தருகின்ற ஊதியத்தை அரசு 30 நாட்களுக்குள் ஈடு செய்ய வேண்டும்.

* மேற்கூறிய இனங்களில் அடங்காதவர்களுக்கு, ஒவ்வொரு வார்டிலும், ஒன்றியத்திலும் பதிவு அலுவலகம் திறந்து அத்தகைய ஏழைகளை பதிவு செய்து ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கு திறந்து அந்த கணக்கில் ரூ.3,000 உடனே வழங்கவேண்டும்.

* எல்லா வகையான வரிகளையும் கட்டுவதற்கு இறுதி நாளை ஜூன் 30-ந்தேதிக்கு ஒத்தி வைக்கவேண்டும்.

* வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய மாத தவணை இறுதி நாட்களை ஜூன் 30-ந்தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்.

* மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படும் பொருட்கள், சேவைகள் மீது உள்ள ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை 5 சதவீதம் உடன் குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News