செய்திகள்
மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் நிறுத்தம்- முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் வரும் 31ந்தேதி வரை நிறுத்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:
உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 341 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில் நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கை ஒட்டி நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது. சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை வரும் 31ந்தேதி வரை இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவை வரும் 31ந்தேதி வரை நிறுத்தப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.