கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் கரையாம்புத்தூர் போலீசார் மது பிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மதுக்கடைகளில் வித்தியாசமான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
பாகூர்:
புதுவையில் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு மது பார்களும் மூடப்பட்டுள்ளது. ஆனால், மது பாட்டில்களை வாங்கி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டதால் மதுபிரியர்கள் மதுபாட்டில்களை வாங்க புதுவைக்கு படையெடுத்து வருகிறார்கள்.
குறிப்பாக புதுவை எல்லை பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் மதுபாட்டில்களை வாங்க கூட்டம் அலைமோதுகிறது.
அதுபோல் தமிழக எல்லையையொட்டி புதுவை கரையாம்புத்தூரில் 4 மதுக்கடைகள் உள்ளது. இந்த மதுக்கடைகளில் மது அருந்த தடை விதிக்கப்பட்டாலும் மது பாட்டில்கள் வாங்கிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த மதுக்கடைகளில் மதுபாட்டில் வாங்க கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த 2 நாட்களாக மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் கரையாம்புத்தூர் போலீசார் மது பிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மதுக்கடைகளில் வித்தியாசமான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
அதாவது மதுக்கடை வாயில்களில் ஒரு மீட்டருக்கு இடைவெளியில் கட்டம் போட்டு மது பிரியர்கள் நின்று மதுபாட்டில்களை வாங்கி செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். இதனை போலீசார் நின்று கண்காணித்து வருகின்றனர்.
அதுபோல் மதுக்கடை ஊழியர்கள் சீருடை மற்றும் முகக்கவசம் அணிந்து மதுபாட்டில்களை வினியோகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் தினமும் சீருடை மற்றும் முக கவசத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் மதுக்கடை ஊழியர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.