செய்திகள்
தீ விபத்து

கிருஷ்ணகிரியில் பிரபல பல்பொருள் அங்காடியில் தீ விபத்து

Published On 2020-03-19 17:17 GMT   |   Update On 2020-03-19 17:17 GMT
கிருஷ்ணகிரியில் இன்று அதிகாலையில் பிரபல பல்பொருள் அங்காடியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் ஒரு மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் பெங்களூர் சாலையில் லண்டன்பேட்டை பகுதியில் பிரபல பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில், இந்த கடையின் வெளியே உள்ள பழக்கூழ் தயாரிக்கும் பகுதியில் இருந்து புகை வெளிவந்துள்ளது. இதை பார்த்த சாலையில் சென்றவர்கள் இதுகுறித்து கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் அந்த தீ கடையின் உள்பகுதியில் பரவியது. இதனால் கடையில் இருந்த சில பொருட்களும் எரிந்து நாசமானது. மேலும், கடையின் வெளியே வைத்திருந்த பிளக்ஸ் பேனரும் எரிந்தது, இதனால் அந்த பகுதில் புகை மூட்டம் அதிக அளவில் இருந்தது. இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.

மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது யாராவது தீ வைத்து சென்றனரா? என்பது குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் பெங்களூர் சாலையில் பெரும்பாலான பகுதியில் விடியற்காலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.
Tags:    

Similar News