செய்திகள்
சென்னை மாநகராட்சி

2020-21 நிதி ஆண்டு: சென்னை மாநகராட்சிக்கு ரூ.3,815 கோடி பட்ஜெட்

Published On 2020-03-18 02:41 GMT   |   Update On 2020-03-18 02:41 GMT
சென்னை மாநகராட்சிக்கு 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மெரினா கடற்கரையை மேம்படுத்த சிறப்பு திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:

ஒவ்வொரு ஆண்டும் பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் மார்ச் மாதம் 15-ந் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகள் இருந்தால் மாமன்ற கூட்டம் நடத்தப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். சென்னை மாநகராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத காரணத்தினால் சிறப்பு அதிகாரியான மாநகராட்சி கமிஷனர் பட்ஜெட் தாக்கல் செய்வார்.

அந்த வகையில் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தாக்கல் செய்துள்ளார். இதில் வருவாய் வரவு ரூ.3 ஆயிரத்து 81 கோடியே 21 லட்சம் ஆகவும், வருவாய் செலவு ரூ.3 ஆயிரத்து 815 கோடியே 7 லட்சம் ஆகவும் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. பற்றாக்குறை ரூ.733.86 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* புதிய பாலங்கள் கட்டுமான பணிகள் மற்றும் பாலங்கள் விரிவுபடுத்தும் பணிக்கு ரூ.512 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* மாநகராட்சி பகுதிகளில் புதிய தெரு மின் விளக்கு கம்பங்கள் அமைத்தல், மின் கம்பிகள் மற்றும் இதர மின் தொடர்பு உபகரணங்கள், இதர பணிகளுக்கு ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* மாநகர பஸ் வழித்தடங்களின் மேம்பாடு, சாலை பணிகள், தமிழக அரசு, மத்திய அரசு மானியத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு விதமான பணிகள், உட்புற தார்ச்சாலைகள் மேம்பாட்டிற்காகவும், ‘சிமெண்ட் கான்கிரீட்’ சாலைகளுக்காகவும், மண்டலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள இதரப் பணிகளுக்காகவும் ரூ.384.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்தின் நிதியின் கீழ் ரூ.235 கோடியும், பிற மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு ரூ.140 கோடியும் ஒதுக்கீடு.

* மெரினா கடற்கரை ஒட்டிய சாலை பகுதிகளில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், உலக தரம் வாய்ந்த சாலைகள், நடைமேம்பாலங்கள், நடைபாதைகள் அமைப்பதற்காக ரூ.155 கோடியும் ஒதுக்கீடு.

* பூங்காக்களை நவீனப்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும், புதிய பூங்காக்களை உருவாக்கவும், விளையாட்டு திடல்களை அமைக்கவும் சென்னை நதிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு.

* நிர்வாக செலவுக்காக ரூ.119.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மூலதன பணிகளை மேற்கொள்வதற்காக பெறப்பட்ட கடன்களுக்கு செலுத்தவேண்டிய வட்டிக்காக ரூ.185 கோடி ஒதுக்கீடு.

* தொழில் உரிம கட்டணம், கட்டிட உரிம கட்டணம், அங்காடி உரிம கட்டணம், வாகன நிறுத்த கட்டணம் மற்றும் இதர வருவாய் இனங்களின் மூலமாக ரூ.1,051 கோடி கிடைக்கும்.



* சொத்து வரி மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.700 கோடியாக இருக்கும். தொழில் வரி வருவாய் ரூ.550 கோடியாக இருக்கும்.

* மாமன்ற உறுப்பினர் ‘வார்டு’ மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேயர் சிறப்பு மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு.

* மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மண்டல அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள், பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், வணிக வளாகங்கள் கட்டுதல், பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், நவீன நடைபாதை பணி உள்ளிட்டவைகளுக்கு ரூ.148 கோடி ஒதுக்கீடு.

* முத்திரைத்தாள் மீதான கூடுதல் வரி மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.180 கோடியாக இருக்கும்.

* தூய்மை இந்தியா உள்பட துப்புரவு பணிகளுக்காக ரூ.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தன.
Tags:    

Similar News