செய்திகள்
எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்?: எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் காரசார விவாதம்

Published On 2020-03-17 01:52 GMT   |   Update On 2020-03-17 04:34 GMT
2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது தொடர்பாக, சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சென்னை :

தமிழக சட்டசபையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. கொறடா சக்கரபாணி (ஒட்டன்சத்திரம் தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

உறுப்பினர் சக்கரபாணி:- உள்ளாட்சிகளுக்கான நிதி பகிர்வு 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. வீடுகள் கட்டி 3 ஆண்டுகள் ஆகியும் சோலார், பேட்டரி கொடுக்கவில்லை. நீங்கள் கொடுத்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் போதாமல் வீடு கட்டியவர்கள் கடனாளியாகிவிட்டார்கள்.



அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- உங்கள் (தி.மு.க.) ஆட்சியில் தான் வீடு கட்டியவர்கள் கடனாளியானார்கள்.

உறுப்பினர் சக்கரபாணி:- 100 நாள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு 3, 4 மாதங்கள் இடைவெளியில் தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- இது மத்திய அரசின் திட்டம். பணியாளர்கள் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக சம்பளம் வரவு வைக்கப்படுகிறது.



உறுப்பினர் சக்கரபாணி:- 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் நீங்களே (அ.தி.மு.க.) வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவதாக சொல்கிறீர்கள். இந்த ஆட்சி மீது மக்கள் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்பது நாடாளுமன்ற தேர்தல் முடிவை வைத்து தெரியும். மேயரை தேர்ந்தெடுக்க நேரடி தேர்தல் இருந்ததை மறைமுக தேர்தல் என்று நீங்கள் மாற்றுனீர்கள். பயம் தானே?.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- பயம் எதுவும் எங்களுக்கு கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் நீங்கள் (தி.மு.க.) வெற்றி பெற்றீர்கள். சரி, நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஏன் தோல்வி அடைந்தீர்கள். மக்கள் உண்மையை புரிந்து கொண்டதால், எங்களுக்கு வெற்றியை தந்தார்கள். எங்களுக்கு மக்களிடம் செல்வாக்கு கூடியதே தவிர குறையவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- கவர்ச்சிகரமான அறிவிப்புகளை சொல்லி நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றதாக தொடர்ந்து சொல்லி வருகிறீர்கள். அதற்கு ஒரு விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். அதன்பின்னர், நாடாளுமன்ற தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை, திட்டங்களை நிறைவேற்றுவோம்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- அப்படி என்றால், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது சொல்ல வேண்டிய வாக்குறுதிகளை நாடாளுமன்ற தேர்தலின்போது கூறியது ஏன்?. ஆட்சியில் இல்லாதபோது நிறைவேற்ற முடியாத திட்டங்களை எப்படி கூற முடியும்?. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றியை தந்தார்கள். எனவே, 2021-ம் ஆண்டு யாரை ஆட்சிக்கு கொண்டு வருவது என்று மக்கள் முடிவு செய்வார்கள்.

இவ்வாறு விவாதம் நடந்தது.
Tags:    

Similar News