செய்திகள்
கொள்ளை

இண்டூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2020-03-14 14:59 GMT   |   Update On 2020-03-14 14:59 GMT
இண்டூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இண்டூர்:

தருமபுரி மாவட்டம், இண்டூரை அடுத்துள்ள சோழப்பாடி பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது50). இவரது மகன் குமரேசன். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று சுமதி தனது மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றுள்ளார். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று சுமதியின் வீட்டின் பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகையும், பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதே போல் வேடியப்பன் என்பவர் வீட்டிலும் மர்ம நபர்கள் பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் வீட்டிற்குள் சென்று பீரோவில் எதுவும் இல்லாததால் ஏமாந்து திரும்பி சென்றனர். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் இன்றுகாலை அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து இண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கைரேகை நிபுணர்களையும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் கொள்ளையர்களின் கைரேகை பதிவு உள்ளதா? என்று ஆய்வு செய்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து கைரேகைகளை சேகரித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதியில் இருந்து வருகின்றனர்.

Tags:    

Similar News