செய்திகள்
தற்கொலை

குலசேகரம் அருகே கடன் தொல்லையால் தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2020-03-14 08:28 GMT   |   Update On 2020-03-14 08:28 GMT
குலசேகரம் அருகே கடன் தொல்லையால் தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்:

குலசேகரத்தை அடுத்த உண்ணியூர்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 48). தொழிலாளி.

இவர் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்ததில் ஏற்பட்ட கடன் காரணமாக மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார். கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவர் அவதிப்பட்டு வந்தார்.

சம்பவத்தன்று வீட்டின் அருகே வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குலசேகரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குமரேன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுசீந்திரம் அருகே சடையன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மணி(65). இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு வேலைக்குச் செல்ல முடியாமல் இருந்து வந்தார். இதில் மன வேதனையுடன் மணி காணப்பட்டு வந்தார்.

சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்த அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் காளிஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News