செய்திகள்
தேமுதிகவுடன் எந்த பிரச்சினையும் இல்லை- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அதிமுக- தேமுதிக கூட்டணி உறுதியாக உள்ளது. அதைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு. தி.க., மேல்சபை எம்.பி. பதவியை கேட்டிருந்தது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த போதே தே.மு. தி.க.வுக்கு மேல்சபை எம்.பி. பதவி தருவதாக உறுதி அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கு மேல்சபை எம்.பி. பதவிக்கான வாய்ப்பை வழங்கி இன்று அ.தி.மு.க. சார்பில் திடீரென அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது தே.மு.தி.க.வுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தமாகா தலைவர் ஜிகே வாசனுக்கு எம்பி சீட் வழங்கியது ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவு . கூட்டணிக் கட்சிகளை திமுக உதாசீனப்படுத்துவது போல் அதிமுக செய்யாது. அரசியலில் கருத்து மோதல் இருக்கலாம், காழ்ப்புணர்ச்சி மோதல் இருக்கக் கூடாது. அதிமுக- தேமுதிக கூட்டணி உறுதியாக உள்ளது. அதைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. பாஜக அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு நாங்கள் குழந்தைகள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.