செய்திகள்
ஜல்லிக்கட்டு

காரியாபட்டி அருகே ஆவியூரில் ஜல்லிக்கட்டு- மாடு முட்டி 9 பேர் காயம்

Published On 2020-03-09 14:04 GMT   |   Update On 2020-03-09 14:04 GMT
காரியாபட்டி அருகே ஆவியூரில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாடுபடி வீரர்கள் 9 பேர் காயமடைந்தனர்.
காரியாபட்டி:

காரியாபட்டி அருகே ஆவியூரில் அழகிய பெருமாள் சாமி மற்றும் பெரிய கருப்பண்ணசாமி கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நள பெருமாள் வகையறா சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டுக்கான தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 6 ஆண்டுகளாக ஆவியூரில் நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் ஊர் மக்களின் முயற்சியால் நேற்று சிறப்பாக நடைபெற்றது. காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து மற்ற காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கினர். பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 600 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடு முட்டியதில் வீரர்கள் 9 பேர் காயமடைந்தனர்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயம், சைக்கிள், குக்கர், மிக்சி, மின் விசிறி, கட்டில், அயன்பாக்ஸ், சில்வர்பாத்திரம், பணம், வேட்டி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடமாடும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். போட்டியில் பங்கேற்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தாலும் 600 காளைகளுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டதால் மற்ற காளைகளின் உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
Tags:    

Similar News