பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு
பூதலூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் காவிரி கொள்ளிடம் ஆறுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம்.
பூலோகம் போற்றும் புதுமை மாதா என்று பக்தர்களால் அழைக்கப்படும் பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு நடைபெற்றது. பூண்டி மாதாவின் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும். உலகில் அமைதியும் சமாதானமும் நலவாழ்வும் நிலவவும் வேண்டி நடைபெற்ற புதுமை இரவு வழிபாட்டு நிகழ்ச்சிகளை பெங்களுர் புனித கஸ்பார் தியானமைய இயக்குநர் அருட்தந்தை மரிய அந்தோணி தலைமையேற்று வழிநடத்தினார்.
அருட்தந்தை மரிய அந்தோணி தலைமையில் அருட்பொழிவுதிருப்பலி ஆலய வளாகத்தில் நடைபெற்றது. திருப்பலிக்கு பின்னர் பூண்டி மாதாவின் தேர்பவனி பக்தர்களின் ஜெபமாலை பாடல்களுடன் நடந்தது. இதில் கலந்த கொண்ட பக்தர்கள் தங்கள் கைகளில் மெழுகு வர்த்திகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
சிறப்பு நற் கருணை ஆராதனைக்கு பின்னர் இரவு ஜெபவழிபாடு நடை பெற்றது. இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ். தியானமைய இயக்குநர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள் விக்டர் லாரன்ஸ், ஆரோக்கிய ராஜேஸ், ஆன்மிக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.