செய்திகள்
மாநில தேர்தல் ஆணையம்

9 மாவட்ட உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடு- தேர்தல் அதிகாரிகள் நியமனம்

Published On 2020-03-06 06:14 GMT   |   Update On 2020-03-06 06:14 GMT
வார்டு வரையறை பணிகள் முடிவடைந்து விட்டதால் 9 மாவட்டங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.

சென்னை:

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த போது புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களான 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.

வார்டு வரையறை பணிகள் முடிந்தவுடன் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வார்டு வரையறை பணிகள் முடிவடைந்து விட்டதால் 9 மாவட்டங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இதற்காக அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் ஆணையர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் தயாராக உள்ளது. அதை சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

வாக்காளர் பட்டியலை முறைப்படுத்துவது, அதை இறுதி செய்வது போன்ற பணிகளில் மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டது.

இதையொட்டி 9 மாவட்டங்களில் புதிதாக உருவான 5 மாவட்டங்களுக்கு தேர்தல் அதிகாரியாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 9 மாவட்டங்களுக்கும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News