செய்திகள்
ஒகேனக்கல்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுழலில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

Published On 2020-03-05 17:12 GMT   |   Update On 2020-03-05 17:12 GMT
ஒகேனக்கல்லுக்கு நண்பர்களுடன் சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் காவிரி ஆற்றில் சுழலில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
பென்னாகரம்:

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள கொங்காரெட்டிப்பள்ளி சாந்தி நகரை சேர்ந்தவர் துளசிராம். இவருடைய மகன் பிரித்தம் சவுத்ரி (வயது22). இவர் சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார்.

அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த பின்னர் நண்பர்கள் அனைவரும் ஆலாம்பாடி பகுதியில் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது பிரித்தம் சவுத்ரி ஆற்றில் நீந்தி சென்றபோது திடீரென ஏற்பட்ட சுழலில் சிக்கி கொண்டார். அவரை, நண்பர்கள் மற்றும் பரிசல் ஓட்டிகள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அவர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்து விட்டார்.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பரிசல் ஓட்டிகள், மீனவர்கள் உதவியுடன் சுழலில் சிக்கி இறந்த பிரித்தம் சவுத்ரியின் உடலை மீட்டனர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கல்லூரி மாணவர் காவிரி ஆற்றில் சுழலில் சிக்கி இறந்த சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News