செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க.வினருக்கு சிறப்பு பயிற்சி பட்டறை- முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

Published On 2020-03-02 09:14 GMT   |   Update On 2020-03-02 09:14 GMT
‘சொல்வோம்-வெல்வோம்’ என்ற சிறப்பு பயிற்சி பட்டறை வகுப்பு நாளை ராயப்பேட்டை ஹேமமாலினி மண்டபத்தில் நடக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

சென்னை:

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. இலக்கிய அணி சார்பில் பேச்சாளர்களுக்கு ‘சொல்வோம்-வெல்வோம்’ என்று சிறப்பு பயிற்சி பட்டறைக்கு இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி ஏற்பாடு செய்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:-

இந்த சிறப்பு பயிற்சி பட்டறை வகுப்பு நாளை (செவ்வாய்) காலையில் ராயப்பேட்டை ஹேமமாலினி மண்டபத்தில் நடக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட அமைச்சர்கள் மற்றும் கட்சி முன்னோடிகள் பங்கேற்கிறார்கள்.

மாநிலம் முழுவதிலும் இருந்து கட்சியின் பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள். இதில் பேராசிரியர் சரஸ்வதி ராமநாதன் ‘அம்மா வாழ்கிறார் நம்மை ஆள்கிறார்’ என்ற தலைப்பிலும், நாடு போற்றும் நல்விருதும் நாலும் பெருகும் நல் ஆதரவும் என்ற தலைப்பில் கவிஞர் ராமானும், அமைதி, வளம், வளர்ச்சி அம்மாவின் வழிநடப்பதே மகிழ்ச்சி என்ற தலைப்பில் ஆவணி மாடசாமி, மூன்றாண்டு நல்லாட்சி நூறாண்டும் தொடருமே என்ற தலைப்பில் பாலரமணி, கோ.மணி ஆகியோரும் உரையாற்றுகிறார்கள்.

வேளாண் புரட்சியில் வெற்றி தமிழகம் என்ற தலைப்பில் ஜீவாகாசிநாதன், கார்த்திக் ஆகியோரும், சிறுபான்மை மக்களை சீர் தூக்கும் சிறப்பான ஆட்சி என்ற தலைப்பில் பாஸ்கரன், ரேகா, சரித்திர நாயகர்களின் சாதனை அரசு என்ற தலைப்பில் டாக்டர் மூவேந்தன், எளிமை முதல்வரின் ஏற்றமிகு நல்லாட்சி என்ற தலைப்பில் பேராசிரியர் குமரகுருபரன் ஆகியோரும் பேசுகிறார்கள்.

கள்ளக்குறிச்சி கலைமகள் காயத்ரி ‘பெண்ணுரிமைக்கு முதலிடம் பெருமை கொள்ளும் தமிழகம்’ என்ற தலைப்பிலும், விவசாயி ஆட்சியின் வெற்றிப்பயணம் தொடருமே என்ற தலைப்பில் ராசுகுமார், முனீசுவரன் ஆகியோரும் பேசுகிறார்கள்.

அம்மா அரசின் ஆட்சியையும், மாட்சியையும் கழகத்தினர் பட்டி தொட்டியெங்கும் சென்று எடுத்துரைக்க இந்த உரைகள் உத்வேகம் அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News