செய்திகள்
குழந்தை திருட்டு

பெசன்ட் நகர் கடற்கரையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு

Published On 2020-02-29 11:03 GMT   |   Update On 2020-02-29 11:03 GMT
பெசன்ட்நகர் கடற்கரையில் கடத்தப்பட்ட நரிக்குறவ தம்பதியின் பெண் குழந்தை எம்.ஜி.ஆர் நகர் அருகே பத்திரமாக மீட்கப்பட்டது.
சென்னை:

தஞ்சாவூரை சேர்ந்த நரிக்குறவ தம்பதியான பாஷாவும்(25), அவரது மனைவி சினேகாவும்(22) கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பிழைப்புக்காக சென்னை வந்தனர். பெசன்ட்நகர் கடற்கரையில், பாசியினால் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்து வந்தனர். அவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை ஒன்று இருந்தது.
 
தினமும் வியாபாரத்தை முடித்துக் கொண்டு பெசன்ட்நகர் கடற்கரையிலேயே அவர்கள் குழந்தையோடு துங்கிவிடுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் தம்பதிகள் தங்களது குழந்தையோடு வழக்கம் போல் பெசன்ட்நகர் கடற்கரையில் படுத்து தூங்கினார்கள்.

நேற்று அதிகாலையில் கண்விழித்துப் பார்த்தபோது பெண் குழந்தையை காணவில்லை. யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த தம்பதி குழந்தையை கண்டுபிடித்து தருமாறு சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அடையாறு துணை கமிஷனர் பகலவன் உத்தரவின் பேரில் சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர்.

இந்நிலையில், பெசன்ட்நகர் பகுதியில் நேற்று கடத்தப்பட்ட 8 மாத பெண் குழந்தையை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் போலீசார் பத்திரமாக மீட்டனர். மேலும், குழந்தையை கடத்திய கும்பலையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடத்தப்பட்ட குழந்தை தமிழரசன் என்பவருக்கு ரூ. 2.25 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News