செய்திகள்
கைது

கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது

Published On 2020-02-28 10:27 GMT   |   Update On 2020-02-28 10:27 GMT
புதுவண்ணாரப்பேட்டையில் கணவரை கழுத்தை நெரித்து கொன்று உடலை தூக்கில் தொங்கவிட்ட மனைவியை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:

புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்தவர் தணிகைவேல் (வயது 46). எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி ரேகா (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டுக்கு வந்த தணிகைவேல் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு குழந்தைகளை அடித்து உதைத்தார். இதனால் கணவன்-மனைவி இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில், கணவர் தணிகைவேல் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக ரேகா போலீசில் புகார் செய்தார்.

மருத்துவ பரிசோதனையில் தணிகைவேல் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், ரேகாவிடம் விசாரணை செய்தார்.

இதில் ரேகா கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரிந்தது.

இது குறித்து ரேகா கூறும்போது, “சம்பவத்தன்று குடித்து விட்டு தகராறு செய்த தணிகைவேல் குழந்தையை அடித்ததால் எனக்கு கோபம் வந்தது. ஆத்திரத்தில் அவருடைய கழுத்தை பிடித்து நெரித்தேன். இதில் அவர் இறந்து விட்டதால் உடலை தூக்கில் தொங்க விட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் கூறினேன்” என்றார்.

இதையடுத்து ரேகாவை போலீசார் கைதுசெய்தனர். அவர் ஒருவரே கணவரை கொன்றாரா? அவருக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்று விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News