செய்திகள்
விபத்து பலி

சேலத்தில் மொபட் மீது கார் மோதி விபத்து- 2 பேர் பலி

Published On 2020-02-28 08:51 GMT   |   Update On 2020-02-28 08:51 GMT
சேலத்தில் மொபட் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளிகள் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் அம்மாப்பேட்டை காமராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சின்னகண்ணு (வயது 65), கிருஷ்ணன் (49).

தொழிலாளிகளான 2 பேரும் கடந்த சில நாட்களாக சன்னியாசிகுண்டு பகுதிக்கு வேலைக்கு சென்றனர். நேற்றும் வழக்கம் போல சன்னியாசிகுண்டு பகுதிக்கு வேலைக்கு சென்ற அவர்கள் வேலை முடிந்த பின்னர் இரவு 7 மணியளவில் மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டனர்.

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வந்த போது மொபட்டில் சாலையை கடக்க முயன்றனர். மொபட்டை சின்ன கண்ணு ஓட்டினார். கிருஷ்ணன் பின்னால் அமர்ந்து இருந்தார்.

அப்போது அயோத்தியாப் பட்டினத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சாலையில் உயிருக்கு போராடிய படி கிடந்த 2 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நள்ளிரவு 12 மணியளவில் 2 பேரும் அடுத்தடுத்து இறந்தனர். இதனை அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டனர். இறந்தவர்களின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் சோகத்தை ஏற்படுத்தியது.

விபத்தில் பலியான 2 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது. இதையொட்டி உறவினர்கள் அதிக அளவில் திரண்டுள்ளதால் அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை பிடித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News