செய்திகள்
கைது

14 வயது சிறுமியை விபசாரத்தில் தள்ளிய வில்லிவாக்கம் பெண் கைது

Published On 2020-02-28 07:38 GMT   |   Update On 2020-02-28 07:38 GMT
சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 14 வயது சிறுமியை விபசாரத்தில் தள்ளிய வில்லிவாக்கத்தை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை:

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 14 வயது சிறுமி பாலியலுக்காக காரில் கடத்தப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காரில் தங்கை இருந்ததை அவரது சகோதரர் பார்த்து விசாரித்தார்.

அப்போது அந்த காரில் 2 இளைஞர்களும் இருந்தனர். அவர்களிடம் “எனது தங்கையை எங்கு அழைத்து செல்கிறீர்கள்” என வாலிபர் கேட்டார். அப்போது அந்த வாலிபர்கள், பணம் கொடுத்து பாலியலுக்கு அழைத்து செல்வதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் அண்ணன், இளைஞர்களிடம் தகராறு செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தனது தங்கையை மீட்க சினிமா பாணியில் சண்டையும் போட்டார். இதுபற்றி தெரிய வந்ததும் சூளைமேடு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, காரில் இருந்த பைசல் என்ற வாலிபர் தப்பி ஓடி விட்டார். டிரைவர் பிரகாஷ் போலீசில் சிக்கினார். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற சூளைமேடு போலீசார் சிறுமியை மீட்டனர்.

இந்த விவகாரம் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது. இதுபற்றி சூளைமேடு போலீசார் கூறும்போது, “பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் புகார் தருவதற்கு தயங்குவதாக” தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இதுதொடர்பான செய்திகள் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியானது.

இந்த நிலையில் மாலை சிறுமி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தினர்.

இன்ஸ்பெக்டர் ஞான செல்வம், சம்பவம் பற்றி விசாணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தார்.

டிரைவர் பிரகாஷ், வாலிபர் பைசல் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை பாய்ந்துள்ளது. டிரைவர் பிரகாஷ் நேற்றே கைது செய்யப்பட்ட நிலையில் பைசலை போலீசார் தேடி வருகிறார்கள்.

இளைஞர்கள் இருவரும் சிறுமியை விபசார கும்பலிடம் பணம் கொடுத்து அழைத்து வந்திருக்கலாம் என்று போலீசார் கருதினர். இது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது சிறுமியை காரில் கடத்திய இளைஞர்கள் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் பணம் கொடுத்து அழைத்து வந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து மகளிர் போலீசார் இன்று அந்த பெண்ணை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 14 வயது சிறுமி வில்லிவாக்கம் பெண்ணிடம் சிக்கியது எப்படி? இது போன்று மேலும் பல சிறுமிகளை அவர் விபசாரத்தில் தள்ளி உள்ளாரா? என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சிறுமி இரவு நேரங்களில் திடீரென இதற்கு முன்பு 2 முறை காணாமல் போய் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதன் மூலம் வில்லிவாக்கம் பெண், 14 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக அந்த பெண்ணிடம் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் சினிமா பாணியில் சகோதரர் ஒருவர் தங்கையை மீட்ட விவகாரத்தில் பாலியலுக்காக அவர் கடத்தப்பட்டு இருப்பதாக வெளியாகி இருக்கும் உறுதியான தகவல்கள் அரும்பாக்கம் மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்ணின் பின்னணி பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் அந்த பெண் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
Tags:    

Similar News