கருவடிக்குப்பத்தில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குபோட்டு தற்கொலை
புதுச்சேரி:
புதுவை கருவடிக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவ நேசன் பெயிண்டர். இவரது மகன் பத்ரிநாத் (வயது 19). இவர் சென்னையில் உள்ள தனியார் எனஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
ஆனால், குடும்ப சூழ் நிலையால் பத்ரிநாத் படிப்பை தொடராமல் கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்ரிநாத் தனது நண்பர் மூலம் தவணை முறையில் புதிய செல்போன் வாங்கினார்.
ஆனால், அதற்கான பணத்தை செலுத்த முடியாமல் பத்ரிநாத் திண்டாடி வந்தார். இதனால் பத்ரிநாத் மனமுடைந்து ஏற்கனவே ஒரு முறை தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது பெற்றோர் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.
இந்த நிலையில் தொடர்ந்து விரக்தியில் இருந்து வந்த பத்ரிநாத் நேற்று மாலை தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து வீட்டின் அறையின் சிமெண்டு கூரையில் இரும்பு கம்பியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.
மாலையில் வேலை முடிந்து சிவநேசனும், அவரது மனைவியும் வந்த போது வீட்டில் பத்ரிநாத் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பத்ரிநாத்தை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரி சோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பத்ரிநாத் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.