செய்திகள்
மு.க.ஸ்டாலின்

கே.பி.பி.சாமி மறைவு அதிர்ச்சி அளிக்கிறது- மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published On 2020-02-27 08:53 GMT   |   Update On 2020-02-27 09:57 GMT
முன்னாள் மீன்வளத்துறை அமைச்சரும், திருவொற்றியூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.சாமி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ. மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

முன்னாள் மீன்வளத்துறை அமைச்சரும், திருவொற்றியூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.சாமி திடீரென்று மறைவெய்தினார் என்ற இதயத்தை கலங்க வைக்கும் துயரச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.


மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றிய அவர், மீனவர்களின் நலனே தன் தலையாய பணி என்ற உயரிய நோக்கில் அவர்களின் பிரச்சனைகளுக்காக முதல்- அமைச்சராக இருந்த கலைஞரிடமும், துணை முதல்-அமைச்சராக இருந்த என்னிடமும் வாதாடி பல நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உற்ற துணையாகவும் “மீனவர் சமுதாயத்தின்” விடி விளக்காகவும் இருந்தவர்.

திராவிட இயக்க கொள்கைகளை தன் நெஞ்சில் மீது ஏந்தி எப்போதும் பொதுப் பணியில் ஈடுபட்டு வந்த அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய பணிகளும், என்னுடன் இணைந்து பணியாற்றிய காலங்களும் என்றைக்கும் மறக்க இயலாதது.


இடையில் அவர் உடல் நலம் குன்றியிருந்த போது அவரை நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்திருக்கிறேன். அந்த நேரங்களில் தன் உடல்நலம் பற்றிக்கூட அக்கறை காட்டாமல் தனது தொகுதி மக்கள் குறித்தும் குறிப்பாக மீனவர் சமுதாயத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் என்னிடம் பேசுவார்.

அந்த அளவிற்கு தொகுதி மக்களுக்காகவும், மீனவர் சமுதாயத்திற்காகவும் இரவு பகலாக பணியாற்றும் ஒரு செயல் வீரரை இந்த தொகுதி மக்கள் இழந்து வாடுகிறார்கள்.

கழகத்தின் போராட்டங்களை முன்னின்று நடத்திடவும் உற்சாக மிக்க கழகத் தொண்டர்களை உருவாக்கவும் ஆர்வம் குறையாமல் தொடர்ந்து உழைத்து வந்த கே.பி.பி.சாமியை இழந்து நானும், தி.மு.க. தொண்டர்களும் தவிக்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மீனவர் சமுதாய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News