செய்திகள்
கைது

வடபழனியில் ஆட்டோவில் வந்து செல்போன் பறித்த 2 பேர் கைது

Published On 2020-02-27 08:09 GMT   |   Update On 2020-02-27 08:09 GMT
வடபழனியில் ஆட்டோவில் வந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
போரூர்:

கோடம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நேற்று மாலை வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள பூங்காவில் அமர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர்கள் திடீரென மணிகண்டனிடம் கத்தியை காட்டி மிரட்டி விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு ஆட்டோவில் ஏறி தப்பி சென்றனர்.

அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் அப்பகுதியில் காவல் பணியில் இருந்த ஏட்டு வெங்கடப்பன், வேலாயுதம் ஆகியோரிடம் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் கொள்ளையர்கள் தப்பி சென்ற ஆட்டோவை விரட்டிச்சென்று வடபழனி பஸ் நிலையம் அருகே மடக்கிப் பிடித்து 2 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிவபிரகாசம், ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பதும் தெரிந்தது.

இருவரும் தனியாக செல்பவர்களை நோட்டமிட்டு அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி தொடர்ந்து செல்போன், பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ, 2 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சிவபிரகாசம் மீது ஏற்கனவே கொள்ளை வழக்கு உள்ளது.

Tags:    

Similar News