செய்திகள்
மீனவர்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 1500 பேர் விரட்டியடிப்பு

Published On 2020-02-27 05:38 GMT   |   Update On 2020-02-27 05:38 GMT
கச்சத்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக 1500 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
ராமேசுவரம்:

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பதும், வலைகளை அறுத்து சேதப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியும் பலனில்லை.

இந்த நிலையில் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 1500 பேர் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று காலை மீன் பிடிக்க புறப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை அந்தப்பகுதிக்கு இலங்கை கடற்படையினர் ரோந்து படகில் வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களிடம், நீங்கள் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உடனே இடத்தை காலி செய்யுங்கள் என்று எச்சரித்தனர்.

பயந்து போன மீனவர்கள் தங்கள் படகுகளை திருப்பி கரைக்கு வர ஆயத்தமானார்கள். அப்போது இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளுக்குள் ஏறி வலைகளை வெட்டி வீசி சேதப்படுத்தினர்.

உயிர் பிழைத்தால் போதும் என்ற அச்சத்தில் மீனவர்கள் அனைவரும் உடனடியாக கரை திரும்பினர். இன்று காலை 8 மணியளவில் அனைவரும் கரைக்கு வந்து சேர்ந்தனர்.

இலங்கை கடற்படை அட்டூழியத்தால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு மத்திய அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News