செய்திகள்
திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய காட்சி.

ஜெயலலிதா மரணத்தில் 3 வருடங்களாகியும் விசாரணை ஆணையம் தாமதம்- மு.க.ஸ்டாலின்

Published On 2020-02-26 10:20 GMT   |   Update On 2020-02-26 10:20 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக் கமி‌ஷன் அமைத்து 3 மாதங்களில் அறிக்கை கேட்ட நிலையில், 3 வருடங்களாகியும் காலத்தை மட்டுமே நீட்டித்து கொண்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சிவானந்தம் திருமண மண்டபம் திறப்பு விழா மற்றும் மாவட்ட அவைத் தலைவர் அசோகன் மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சீர்திருத்த திருமணத்தை நடத்தி வைத்தார்.

இந்த திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

குடியுரிமை சட்டத்தை அ.தி.மு.க. மற்றும் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள், பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். தவிர ஏனைய அனைத்து கட்சிகளும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் சட்டத்தை எதிர்த்து வருகின்றனர்.

தி.மு.க. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்ததுடன் மசோதா தாக்கலின் போது எதிர்த்து வாக்கும் அளித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகையின் போது டெல்லியில் நடைபெற்ற கலவரம் மத்திய- மாநில அரசுகளின் தவறான குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு அளித்ததன் விளைவாகும்.

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி ஊழலில் கொடிகட்டி பறக்கும் ஆட்சியாக உள்ளது.



ஊழலில் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி நம்பர் 1 ஆக உள்ளார். இவர் முதல்வர் எடப்பாடியையே ஊழலில் தோற்கடித்துவிட்டார்.

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவில் மர்மம் இருப்பதாக கூறியது ஓ.பி.எஸ் தான். 40 நிமிடங்கள் ஜெயலலிதாவின் சமாதியில் ஆவியோடு பேசினார். ஓ.பி.எஸ், ஒரு விசாரணைக் கமி‌ஷன் அமைத்து 3 மாதங்களில் அறிக்கை கேட்ட நிலையில், 3 வருடங்களாகியும் காலத்தை மட்டுமே நீட்டித்து கொண்டிருக்கின்றனர். ஒருவேளை மர்மம் கண்டறியப்பட்டால் எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் சிறைக்கு செல்வது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News