செய்திகள்
திருமண விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது எடுத்த படம்.

அ.தி.மு.க.விற்கு மு.க.ஸ்டாலின் விளம்பரம் தேடி தருகிறார்- எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published On 2020-02-26 07:01 GMT   |   Update On 2020-02-26 08:25 GMT
அ.தி.மு.க. ஆட்சியை பற்றி தினமும் நாளிதழில் பேட்டி கொடுத்து வருவதால் நமக்கு விளம்பரமே தேவை இல்லை என்றும் அவரே விளம்பரப்படுத்தி வருகிறார் என்றும் முதலமைச்சர் பேசியுள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சையில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. இல்ல திருமண விழா இன்று தஞ்சையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-



மு.க.ஸ்டாலின் என்னை பற்றியும் அ.தி.மு.க. ஆட்சியை பற்றியும் தினமும் நாளிதழில் பேட்டி கொடுத்து வருகிறார். இதனால் நமக்கு விளம்பரமே தேவை இல்லை. அவரே விளம்பரப்படுத்தி வருகிறார்.


விவசாயிகள் என்றால் அவருக்கு ஏன் அவ்வளவு கோபம் என்று தெரியவில்லை. பச்சைத் துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகளா என கேட்டு விவசாயிகளை கொச்சைப்படுத்தி வருகிறார். என்னைப்பார்த்து நீங்கள் எல்லாம் ஒரு விவசாயியா என்று கேட்கிறார். நான் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயியாக இருந்தேன். தற்போது முதல்வராக இருந்தாலும் நான் ஒரு விவசாயிதான்.

நான் ஊருக்கு செல்லும்போதெல்லாம் விவசாய பணியை செய்து வருகிறேன். இதற்கு மேல் மு.க.ஸ்டாலினுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. விவசாயிகளுக்கும், மக்களுக்குமான ஆட்சி ஜெயலலிதாவின் ஆசியோடு நடந்து வருகிறது.

விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும். கடும் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் உழைக்கிறார்கள். அவர்கள் வாழ்வில் உயர உற்ற தூணாக ஜெயலலிதாவின் ஆசியோடு ஆட்சி நடத்தி வருகிறோம். என்றென்றும் இந்த ஆட்சி மக்களின் நலனையும், விவசாயிகளின் நலனையுமே முழு மூச்சாக கொண்டிருக்கும்.

எதிர்கட்சிகளின் பொய் பிரசாரங்களை யாரும் கண்டுகொள்ள வேண்டாம். எப்போதும் அ.தி.மு.க.வின் ஆட்சி மக்களின் நலன் சார்ந்தே இருக்கும். இதற்காகத்தான் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததோடு இல்லாமல் சட்டசபையில் மசோதா நிறைவேற்றி உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News