செய்திகள்
கோப்பு படம்

புதுக்குடியில் ஜல்லிக்கட்டு காளை மீது அரிவாள் வெட்டு - தனியார் நிறுவன ஊழியர் கைது

Published On 2020-02-25 11:34 GMT   |   Update On 2020-02-25 11:34 GMT
புதுக்குடியில் ஜல்லிக்கட்டு காளையை அரிவாளால் வெட்டிய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:

தஞ்சை அருகே உள்ள புதுக்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் சக்திவேல் என்பவரின் மகன் மனோஜ்(வயது 23). மனோஜ் பொறியியல் படிப்பு படித்துள்ளார். இவர்கள் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்தவர் அழகர். தனியார் கம்பெனியில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் மணிகண்டன். இவர் திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று அழகர் வீட்டு காளை மாடும், மனோஜ் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளையும் ஒன்றுக்கொன்று முட்டிக்கொண்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த அழகரும் அவருடைய மகன் மணிகண்டன் என்பவரும் மனோஜின் ஜல்லிக்கட்டு காளையை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதை தட்டிக்கேட்ட வாலிபர் மனோஜையும் அழகர், மணிகண்டன் இருவரும் சேர்ந்து கல்லால் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலிசார் அழகர் மற்றும் அவருடைய மகன் மணிகண்டன்(வயது 23) இருவர் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர். மணிகண்டனை போலிசார் கைது செய்தனர். அழகரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News