செய்திகள்
புதுவையில் மீனவர் மயங்கி விழுந்து மரணம்
முத்தியால்பேட்டை அங்காளம்மன் கோவில் எதிரில் மயங்கி விழுந்த மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுச்சேரி:
புதுவை வைத்திக்குப்பம் பச்சைவாழியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது75). மீனவரான இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள ஜெகநாதன் நேற்று அதிகாலை மதுகுடிக்க கருவடிக்குப்பம் சாராய கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் முத்தியால்பேட்டை அங்காளம்மன் கோவில் எதிரில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜெகநாதன் மகன் கலைவாணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தந்தையை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜெகநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் வீரவேல் வழக்குபதிவு செய்து ஜெகநாதன் அதிக குடிபோதையில் இறந்தாரா அல்லது உடல்நலக்குறைவால் இறந்து போனாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.