செய்திகள்
கைது

தர்மபுரியில் 2 இருசக்கர வாகனங்கள் திருட்டு- வாலிபர் கைது

Published On 2020-02-24 13:36 GMT   |   Update On 2020-02-24 13:36 GMT
தர்மபுரியில் 2 இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி:

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்துள்ள சந்தைமேடு பகுதியை சேர்ந்த கோகுலக் கண்ணன் (வயது 22). இவர் கடந்த 21-ந்தேதி வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இதுகுறித்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதேப்போன்று தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்துள்ள பறையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 27). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 22-ந்தேதி சொந்த வேலையின் காரணமாக அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அவரது இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். அப்போது அவரது இருசக்கர வாகனத்தை வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகத்தின் வெளியே விட்டு உள்ளே சென்றிருந்தார். அதன் பின்னர் வெளியே வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து பல இடங்களில் தேடிபார்த்தும் வாகனம் கிடைக்காததால் இவர், அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். 

இந்நிலையில் அரூர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வீரமணி (வயது 28) என்பவர் இரண்டு இருசக்கர வாகனத்தையும் திருடி இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வீரமணியை கைது செய்தனர்.
Tags:    

Similar News