ஊரணி நடுவே உள்ள கிணற்றில் தண்ணீர் இருந்தும் எடுக்க முடியாத அவல நிலை
கமுதி:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தலைவ நாயக்கன்பட்டியில் பல ஆண்டுகளாக காவிரி குடிநீர் சப்ளை இல்லாததால் வேறு வழியின்றி விநாயகர் கோவில் ஊரணியில் மழைநீரை சேமித்து, குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.
8 ஆண்டுகளாக பருவ மழை பொய்ப்பால், ஊரணியில் மழைநீர் தேங்காமல், விவசாயத்திற்கு பயன்படுத்தும் உவர்ப்பு நீரையும், டேங்கர்களில் விலை கொடுத்து குடம் 8 ரூபாய் கொடுத்து, வாங்கி பயன்படுத்தி வந்தனர். சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழையால், விநாயகர் கோயில் ஊரணியில் மழைநீர் தேங்கியும், ஊரணி நடுவே உள்ள குடிநீர் கிணற்றில் நீரூற்றுக்கள் அதிகரித்து போதுமான தண்ணீர் கிடைத்தது.
கிணற்றுக்கு செல்ல பாதை இல்லாததால் கிராம மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே ஊரணி நடுவே உள்ள கிணற்றில் உள்ள குடிநீரை சேகரிக்க, பாதை வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.