செய்திகள்
பாளையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் குழந்தைகளுக்கு டி.டி.வி.தினகரன் உணவு பரிமாறிய காட்சி.

குளத்தை தூர்வாராமல் அரசின் கஜானாவை தூர்வாரியுள்ளனர்- டி.டி.வி.தினகரன்

Published On 2020-02-24 08:41 GMT   |   Update On 2020-02-24 08:41 GMT
குடிமராமத்து பணி என்று சொல்லி கொண்டு ஏரி, குளத்தை தூர்வாராமல் அரசின் கஜானாவை தான் தூர்வாரியுள்ளதாக டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பாளையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழக அரசு 3 ஆண்டு ஆட்சியில் ஒரு சாதனையும் செய்யவில்லை. கடந்த 2018-19ம் ஆண்டிலேயே நம்பியாறு, தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு இணைப்பு திட்டத்திற்கு அரசு ரூ.101 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால் அதற்கான பணிகள் இப்போது தான் தொடங்கியுள்ளது. இந்த பணியை எப்போது முடிக்க போகிறார்கள் என்பது தெரியவில்லை.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்- அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால் இதுவரை அங்கு 274 தனியார் நிறுவனங்கள் எண்ணெய் எடுக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறது. அரசு அதனை தடை செய்யாமல் விவசாயிகளின் கோரிக்கையை எப்படி நிறைவேற்ற முடியும்.

இதனால் காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்காது. நானும் ஏழை விவசாயின் மகன்தான். முதல்-அமைச்சர் விவசாயி என்று கூறிக்கொண்டு இவ்வாறு செயல்பட கூடாது.


2017-ல் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் அது உடனடியாக திரும்பி வந்த செய்தி 2 ஆண்டுகளுக்கு பிறகு தான் மக்களுக்கு தெரியவந்துள்ளது.

தமிழக அரசு 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு கண் துடைப்பு வேலைகளை செய்து வருகிறது. பட்ஜெட் தாக்கலின் போது தமிழகத்திற்கு வரவேண்டிய பங்கு தொகை வரவில்லை. தற்போது ரூ.4 லட்சத்து 55 ஆயிரம் கோடி கடன் உள்ளது. ஒவ்வொருவர் மீதும் ரூ.57 ஆயிரம் கடன் உள்ளது.

இளைஞர்களை முன்னேற்றுவதற்கு எந்த ஒரு திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் கடந்த முறை கூவம், அடையாறு பகுதிகளை சுத்தப்படுத்த ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்தது. அதனை எப்படி செலவு செய்தார்கள் என்று இதுவரை தெரியவில்லை. இன்றும் கூவம் துர்நாற்றம் வீசி கொண்டு தான் இருக்கிறது.

எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்து கொண்டு மத்திய அரசின் தயவில் தமிழக அரசு ஆட்சி நடத்துகிறது. இதே நிலை நீடித்தால் வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ள அனைத்து கட்சிகளுக்கும் அடி விழும். குடிமராமத்து பணி என்று சொல்லி கொண்டு ஏரி, குளத்தை தூர் வாராமல் அரசின் கஜானாவை தான் தூர்வாரியுள்ளனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் உண்மையான ஆட்சியை தமிழகத்திற்கு கொண்டு வர பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News