செய்திகள்
பா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாக விளங்குகிறது- ஓ.பி.எஸ். பேச்சு
பா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குவதாக மணி மண்டப திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டணத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மணி மண்டப திறப்பு விழாவில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசுகையில், திருச்செந்தூரின் கடலோரத்தில் சிவந்தி ஆதித்தனார் அரசாங்கம் என்று புகழாரம் சூட்டினார். தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் பா.சிவந்தி ஆதித்தனார் என்றும் அவர் கூறினார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-
திருச்செந்தூரின் புதிய அடையாளமாக பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட தலைவர்கள் பிறந்த மண் தூத்துக்குடி. பாமர மக்களுக்கும் எளிதில் தமிழை கொண்டு சேர்த்தது தினத்தந்தி நாளிதழ். நம்பர் ஒன் நாளிதழின் அதிபருக்கு நம்பர் ஒன் முதலமைச்சர் பெருமை சேர்த்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், பல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என்றார்.
‘அழகும் அமைதியும் ஒருங்கே குடிகொண்ட நகரம் திருச்செந்தூர். திருச்செந்தூரின் சிறப்புகளுக்கு மேலும் சிறப்பாக அமைந்துள்ளது மணி மண்டபம். தொழிலாளர்களுடன் தொழிலாளியாக பணியாற்றியவர் பா.சிவந்தி ஆதித்தனார். பா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது. உழைப்பால் உயர்ந்தவர்கள் நாடார் சமுதாய மக்கள்’ என்றும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.