செய்திகள்
மீனவர்கள் படகு

ராமேசுவரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்

Published On 2020-02-22 05:40 GMT   |   Update On 2020-02-22 05:40 GMT
இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டை கண்டித்து ராமேசுவரத்தில் இன்று விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்:

ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 19-ந் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். மறுநாள் (20-ந் தேதி) அதிகாலை மீனவர்கள் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை தாக்கி விரட்டியதோடு துப்பாக்கிச்சூடும் நடத்தினர்.

இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிங்ஸ்டன் என்பவரின் படகில் குண்டு துளைத்தது. குண்டு துகள் சிதறியதில் படகில் இருந்த சேசு என்ற மீனவரின் கண்களில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர். காயமடைந்த மீனவர் சேசு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் குறித்து உளவுத் துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து ராமேசுவரத்தில் இன்று விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர். இதன் காரணமாக 500 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

இது தொடர்பாக மீனவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடிக்கின்றனர்.

தற்போது அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எனவே மீனவர்கள் பாதுகாப்புடன் மீன்பிடி தொழிலை மேற்கொள்ள மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News