செய்திகள்
சென்னை ஐகோர்ட்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- 2 ஆசிரியர்கள் விடுதலை ரத்து

Published On 2020-02-21 08:49 GMT   |   Update On 2020-02-21 10:22 GMT
செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான 2 ஆசிரியர்களின் விடுதலையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னை:

செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவிகளுக்கு நாகராஜ், புகழேந்தி ஆகியோர் பாடம் நடத்தி வந்தனர்.

50 வயதை கடந்த இவர்கள் தங்களிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.



செல்போனில் ஆபாச படங்களை காண்பிப்பது, பாலியல் சீண்டல்கள் செய்வது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் இவர்கள் மீது செங்கல்பட்டு டவுன் போலீசில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு, அவர்களை விடுதலை செய்தது. போதிய ஆதாரம் இல்லை என்றும் உள்நோக்கத்தோடு இந்த புகார்கள் அளித்துள்ளதாகவும் தீர்ப்பில் நீதிபதி கூறியிருந்தார்.

இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒரு மாணவியின் பெற்றோர் மட்டும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். சாட்சிகளின் வாக்குமூலம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களை ஆய்வு செய்தும், இருதரப்பு வக்கீல்களின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கில் ஆசிரியர்கள் இருவருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்று உத்தரவிட்டார்.

இரு ஆசிரியர்களால் 4 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஆதாரம் இல்லை என்று கீழ் கோர்ட்டு அந்த இரு ஆசிரியர்களையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்துள்ளது.

தீர்ப்பை ரத்து செய்கிறேன். ஆசிரியர்கள் இருவரும் குற்றவாளிகள் என்று முடிவு செய்கிறேன். அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக இருவரும் வருகிற 25-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News