இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டை கண்டித்து மீனவர்கள் நாளை வேலை நிறுத்தம்
ராமேசுவரம்:
ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர்.
நேற்று அதிகாலை இந்திய எல்லையையொட்டியுள்ள கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கி விரட்டியடித்ததோடு மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.
திடீரென்று இலங்கை கடற்படையினர் படகுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த கிங்ஸ்டன் என்பவரின் படகில் குண்டு துளைத்தது.
துப்பாக்கி சூட்டின் போது குண்டின் துகள்கள் சிதறியதில் ஜேசு என்ற மீனவரின் வலது கண்ணில் காயம் ஏற்பட்டது. இதனால் உயிருக்கு பயந்து அங்கு மீன்பிடித்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பினர்.
காயமடைந்த ஜேசு மதுரையில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்தபோது குண்டு துகள்களால் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தக் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கருவிழியில் குண்டு துகள்களும் உள்ளது. இதையடுத்து ஆபரேசன் மூலம் அதனை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக கைது நடவடிக்கையை மட்டும் மேற்கொண்டு வந்த இலங்கை கடற்படை நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தி இருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காயமடைந்த மீனவருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (22-ந் தேதி) ஒருநாள் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.