செய்திகள்
விபத்து

ஆட்டோ மோதி விபத்து- கோவை கல்லூரி மாணவர் பலி

Published On 2020-02-19 10:17 GMT   |   Update On 2020-02-19 10:17 GMT
ஆட்டோ மோதிய விபத்தில் கோவை கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி:

சேலம் செவ்வாய்ப்பேட்டை பங்களா தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் கிரிதரண் (வயது 22).

இவர், கோவை, சின்னவேடம்பட்டி அத்திபாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் தொழில் நுட்ப கல்லூரியில் பி.டெக் பட்டப்படிப்பு படித்து வந்தார். விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்த கிரிதரண் நேற்று இரவு, புல்லட்டில் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரதான நுழைவாயில் அருகில் சென்றபோது புல்லட் மீது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் புல்லட் வேகமாக சாலையில் சரிந்தது. இதில் கிரிதரணுக்கு தலையில் பலத்த அடிபட்டது.

வாகன ஓட்டிகள், பொதுமக்கள், அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கிரிதரணுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து சேலம் சீலநாயக்கன்பட்டி அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கிரிதரணை சேர்த்தனர். நள்ளிரவில் அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து சம்பவம் குறித்து, செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிரிதரண் சென்ற புல்லட் மீது மோதிய ஆட்டோவை, சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News