செய்திகள்
ராமதாஸ்

ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகத்தை விரிவுபடுத்த வேண்டும்- ராமதாஸ்

Published On 2020-02-19 09:13 GMT   |   Update On 2020-02-19 09:13 GMT
ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தை உள்ளிட்ட விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் வழங்கக்கூடிய ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்களை 5 மாவட்டங்களில் அமைக்க தமிழக அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. பா.ம.க.வின் யோசனைகளில் ஒன்றான இத்திட்டம் செயல் வடிவம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய சந்தைகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி தாக்கல் செய்து வரும் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கைகளிலும், 2016-ம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையிலும் இத்திட்டம் இடம் பெற்றிருந்தது. மேலும், இந்த சந்தைகளை நாடு முழுவதும் உள்ள மற்ற சந்தைகளுடன் மின்வணிக நுழைவாயில் மூலமாக இணைக்க வேண்டும் என்றும் பா.ம.க. கூறியிருந்தது. அந்த வசதியையும் இந்த வளாகங்களில் அரசு ஏற்படுத்தவிருப்பது பா.ம.கவுக்கு கிடைத்த வெற்றியாகும்.

புதிதாக அமைக்கப்படவிருக்கும் ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்களில் உழவர்களே தங்களின் விளை பொருட்களை நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடியும். இதனால் உழவர்களுக்கு நல்ல விலை கிடைப்பதுடன், நுகர்வோருக்கும் குறைந்த விலையில் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும். இது இரு தரப்பினருக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

இந்த சந்தைகளுக்கு பொருட்களை கொண்டு செல்ல வசதியாக இரவு 8.00 மணிக்குப் பிறகு வேளாண் விளை பொருட்களை அரசு பேருந்துகளில் ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

வேளாண் விளைபொருட்களை ஏற்றிச் செல்லும் சிறிய சரக்குந்துகள், இழுவை ஊர்திகள் ஆகியவற்றுக்கு சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் பா.ம.க. முன்வைத்த யோசனைகளாகும். அவற்றையும் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.

ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்கள் உழவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய சந்தை வளாகங்களை தமிழகம் முழுவதும் அரசு விரிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News