தஞ்சை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து 2 பேர் படுகாயம்
வல்லம்:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டையை சேர்ந்தவர் காமராஜ் (வயது 60). அதே பகுதியை சேர்ந்தவர் இவருடைய நண்பர் இளங்கோ(55). இருவரும் சொந்தமாக டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இருவரும் காரில் திருச்சிக்கு சென்றனர்.
காரை இளங்கோ ஓட்டி சென்றார். பின்னர் திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி காரில் வந்தனர். அப்போது தஞ்சை -திருச்சி சாலையில் திருமலைசமுத்திரம் முத்தாளம்மன் கோவில் அருகே கார் வந்த போது திடீரென மாடு குறுக்கே வந்துள்ளது. இதில் நிலை தடுமாறிய கார் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் படுகாயங்களுடன் சிக்கி இருந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் இருவரும் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.