செய்திகள்
கைது

காய்ச்சலுக்கு ஊசி போட்டதில் தொழிலாளி உயிரிழப்பு- போலி டாக்டர் கைது

Published On 2020-02-18 03:28 GMT   |   Update On 2020-02-18 05:35 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே காய்ச்சலுக்கு ஊசி போட்டதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தையடுத்து புகாரின் பேரில் போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள பாரதிபுரம் பட்டாலப்பள்ளியை சேர்ந்தவர் ராமன் (வயது 46). 12-ம் வகுப்பு படித்துள்ள இவர் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மோரனஅள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகைக்கு அறை எடுத்து தங்கி அங்குள்ள மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த முனியம்மாள் தனது கணவரான கூலித்தொழிலாளி ஜெயவேல் (40) என்பவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறி ராமனிடம் அழைத்து சென்றார். அங்கு ராமன், ஜெயவேலுக்கு கையில் உள்ள நரம்பில் ஊசி போட்டுள்ளார். ஆனால் ஊசி போட்ட சிறிது நேரத்தில் ஜெயவேல் மயக்கம் போட்டு விழுந்தார்.

இதைப் பார்த்து பதறி போன முனியம்மாள், ஜெயவேலை காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கார் மூலம் கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெயவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து முனியம்மாள் அளித்த புகாரின் பேரில் போலி டாக்டர் ராமனை காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News