செய்திகள்
பசுபதிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகனமேடையை படத்தில் காணலாம்.

கரூர் அருகே பயன்பாட்டில் இல்லாத எரிவாயு தகனமேடை

Published On 2020-02-17 17:57 GMT   |   Update On 2020-02-17 17:57 GMT
கரூர் அருகே பயன்பாட்டில் இல்லாத எரிவாயு தகனமேடை குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்:

சுடுகாட்டில் மரக்கட்டை, பசுஞ்சாண எருவு உள்ளிட்டவற்றின் மூலம் தீமூட்டி இறந்தவர்களின் உடலை தகனம் செய்யும் முறையே முன்பு பெரும்பாலும் கடைபிடிக்கப்பட்டது. அப்போது ஒரே நேரத்தில் அடுத்தடுத்து உடல் வரும்போது தகனம் செய்ய தாமதம் ஏற்படுவது மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டதாலும் தமிழகத்தில் மின்சாரம் மூலம் இறந்தவர்களின் உடலை தகனம் செய்யும் மின்எரிமேடை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களிலும் பயன்பாட்டுக்கு வந்தது. அதில் ஒரு சமயத்தில் ஒரு உடலை மட்டுமே தகனம் செய்வது என்பன உள்ளிட்ட அரசு விதிகள் கடைபிடிக்கப்படுவதால் உடலை மாற்றி தகனம் செய்தல் உள்ளிட்ட குற்ற நிகழ்வுகள் தவிர்க்கப்படுகின்றன. இறுதியாக தகனம் செய்யப்பட்டவரின் சாம்பல் அவரது உறவினர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்படுகிறது.

அந்த வகையில் கரூர் அருகே பசுபதிபாளையம் வடக்குதெருவின் ஒதுக்குப்புறமாக அமராவதி ஆற்றங்கரையை ஒட்டியவாறே கடந்த 2007-ம் ஆண்டில் கரூர் நகராட்சி பகுதி-2 திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி நடந்தது. அப்போது மின்உலை, மின்னூட்ட தகடு உள்ளிட்டவை வைக்கப்பட்டு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன. தண்ணீர் வசதிக்காக அங்கு கிணறு தோண்டப்பட்டு மின்மோட்டார் மூலம் தண்ணீர் சேமிக்கப்பட்டது. மேலும் இறந்தவர் உடலை தகனம் செய்ய வருபவர்கள் குளிப்பதற்காக குளியலறை வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்தவுடனேயே எந்திரங்களில் ஏற்பட்ட பழுதினால் இந்த தகனமேடையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட இடங்களில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

அதன் பிறகும் நீண்ட நாட்களாக அந்த எரிவாயு தகனமேடையானது சிதிலமடைந்து கிடப்பில் போடப்பட்டபடி உள்ளது. அங்குள்ள ஜெனரேட்டர் உள்பட எந்திரங்கள் வீணாக கிடக்கின்றன. உடல் தகனம் செய்யும் கட்டிடத்தின் உள்புற பகுதியில் சிமெண்டு பூச்சுகள் ஆங்காங்கே பெயர்ந்து போய் இருக்கிறது. மேலும் இறந்தவர் உடலை தூக்கி செல்லும் தள்ளுவண்டி துருப்பிடித்து விட்டது. குளியலறை கதவுகள் உடைந்து கிடக்கின்றன. இதற்கிடையே இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்துவதற்கும், புகைப்பதற்கும் மற்றும் சில சட்டவிரோத செயல்களுக்கும் பயன்படுத்துவதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நவீன தகனமேடை பயன்பாட்டில் இல்லாத போதும், அதிலுள்ள லட்சகணக்கு மதிப்பிலான பொருட்களை களவாடி செல்வதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது.

தற்போது கரூர் அருகே பாலம்மாள்புரத்தில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையை கரூரில் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்களும் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பசுபதிபாளையம், தொழிற்பேட்டை, ராமாகவுண்டனூர், கொளந்தானூர் உள்ளிட்ட இடங்களை சேர்ந்தவர்கள் சில கிலோ மீட்டர் தூரம் சுற்றி கொண்டு இறந்தவர் உடலை தகனம் செய்ய பாலம்மாள் புரத்திற்கு செல்வதால் மிகுந்த சிரமம் அடைகின்றனர். தற்போது பசுபதிபாளையத்தில் ஏற்படும் அதிக போக்குவரத்து நெருக்கடியில் இறந்தவர் உடலை கொண்டு செல்வதில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே சிதிலமடைந்த அந்த கட்டிடம், மின்உலை உள்ளிட்டவற்றை சீர் செய்து எரிவாயு தகனமேடையை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது எப்போது? என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Tags:    

Similar News