செய்திகள்
புளியங்குடி அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
புளியங்குடி அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புளியங்குடி:
புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த முத்துபாண்டியன் மகள் கவிதா (வயது 25) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கவிதா தனது பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கவிதா கடந்த ஒரு வருடமாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் கவிதாவின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்தபோது கவிதா வீட்டில் இல்லை.
கவிதாவை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். அப்போது அந்த ஊருக்கு அருகே உள்ள கிணற்றில் கவிதாவின் காலணி கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து வாசுதேவநல்லூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறங்கி தேடியபோது கவிதாவின் உடல் கிடந்தது.
இதையடுத்து தீயணைப்பு துறையினர் கவிதாவின் உடலை மீட்டு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கவிதா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.