வீராம்பட்டினத்தில் மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல்- மீனவர் கைது
பாகூர்:
வீராம்பட்டினம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சுந்தர் (வயது36). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்வம் (50). இருவரும் மீனவர்கள். இவர்கள் 2 பேர் குடும்பத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று செல்வம் தனது வாகனத்தை சுந்தர் வீட்டையோட்டி நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுந்தரின் தாய் சரோஜா (65) வீட்டுக்கு செல்ல இடையூறாக இருப்பதால் அந்த வாகனத்தை அப்புறப் படுத்துமாறு கூறினார்.
இதில் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் தகாத வார்த்தைகளால் திட்டி சரோஜாவை தாக்கினார். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இந்த தாக்குதலில் காயம் அடைந்த சரோஜா மயங்கி விழுந்தார். உடனடியாக சரோஜாவை அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து சுந்தர் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் வழக்குபதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.