ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 9 ஆதரவற்ற முதியவர்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு
ராயபுரம்:
தமிழகம் முழுவதும் ரெயில் நிலையங்களில் ஆதரவற்ற பல முதியவர்கள் சுற்றித் திரிகின்றனர். ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அளிக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு பிளாட்பாரத்தில் தங்குகின்றனர்.
இவர்களில் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் தண்ட வாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு உயிரிழக்கின்றனர். பலர் நோயால் பாதிக்கப்பட்டு நாளடைவில் உயிரிழந்துவிடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ‘ரெயில் நிலையங்களில் ஆதரவின்றி சுற்றித்திரியும் முதியவர்களை மீட்டு அவர்களுக்கு புத்தாடை, உணவு வழங்கி காப்பகத்தில் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என ரயில்வே போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து சென்னை வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை ரெயில் நிலையங்களில் போலீசார் சோதனை நடத்தி முதியவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். ரெயில்வே காவல் ஆய்வாளர் சசிகலா தலைமையில் போலீசார் சோதனை நடத்தி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பாபு கான், திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த குமார், கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த பாபு, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சேகர், ரங்கநாதன், ராஜசேகர் உள்ளிட்ட 9 பேரை மீட்டு திருவொற்றியூரில் உள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். ரெயில்வே போலீசாரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.