செய்திகள்
கைது

காதல் கலப்பு திருமணம்- வாலிபரை கொலை செய்த மாமனார் கைது

Published On 2020-02-17 04:40 GMT   |   Update On 2020-02-17 04:40 GMT
வெள்ளகோவிலில் காதல் கலப்பு திருமணம் செய்த வாலிபரை மாமனார் கொலை செய்த சம்பவத்தில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜசேகர் (29). வெள்ளகோவில் புதிய பஸ் நிலையத்தில் பூக்கடை நடத்தி வந்தார்.

இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன் வெள்ளகோவில் குமார வலசு கமிட்டியார் தோட்டத்தை சேர்ந்த சூர்யா மகள் சினேகா (19) என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகளும், பிறந்து 10 நாளே ஆன குழந்தையும் உள்ளது. சூர்யாவும் வெள்ளகோவில் பஸ் நிலையம் பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார்.

மாமனார்- மருமகன் இடையே வியாபாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராஜசேகருக்கு கடந்த 8 வருடத்திற்கு முன் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்று இருப்பது சூர்யாவுக்கு தெரிய வந்தது. அவர் மருமகன் மீது ஆத்திரத்தில் இருந்தார். நேற்று இரவு 7.30 மணிக்கு குடிபோதையில் வெள்ளகோவில பஸ் நிலையத்திற்கு சூர்யா வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த ராஜசேகருடன் தகராறில் ஈடுபட்டார்.

முதல் திருமணத்தை மறைத்து விட்டு எனது மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டது ஏன்? என கேள்வி எழுப்பினார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென சூர்யா தான் மறைத்து வைத்திருந்த கத்திரிகோலால் ராஜசேகரின் நெற்றி, பின் தலை பகுதியில் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

இதனை பார்த்ததும் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சில பயணிகள் அங்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜசேகரை மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


ராஜசேகர்

Tags:    

Similar News