செய்திகள்
அமைச்சர் பாண்டியராஜன்

கீழடி அகழாய்வு பிப்19-ந்தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்- அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

Published On 2020-02-14 14:41 GMT   |   Update On 2020-02-14 14:45 GMT
6ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணிகளை பிப் 19-ந்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்தி வருகின்றனர்.

4 கட்ட பணி முடிந்த நிலையில் கீழடியில் பழந்தமிழர் பயன்படுத்திய அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதையடுத்து 5-வது கட்ட அகழாய்வு பணி ஜூன் மாதம் தொடங்கியது. இதற்காக கீழடியில் தேர்வு செய்யப்பட்ட 110 ஏக்கரில் 10 ஏக்கரில் மட்டும் அகழாய்வு பணி மும்முரமாக நடைபெற்றது.

இந்த ஆய்வின் போது அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பம், இரும்பு-செப்பு பொருட்கள் என 1000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.

அதே போல் பழந்தமிழர் வாழ்வியலை அறியும் வகையில் இரட்டை வட்டச்சுவர், தண்ணீர் தொட்டி, உறைகிணறு, கால்வாய் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன.கீழடியில் கிடைத்த பொருட்களின் காலம், தன்மை குறித்து அறிய அரசு நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் 6ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணிகளை சென்னையில் இருந்து காணொலி மூலம் பிப் 19ந்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார் என்று தமிழ் வளர்ச்சிதுறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News