செய்திகள்
திருமாவளவன்

எத்தனை கட்சிகள், அணிகள் வந்தாலும் தி.மு.க. கூட்டணியை அசைக்க முடியாது- திருமாவளவன் பேட்டி

Published On 2020-02-13 15:02 GMT   |   Update On 2020-02-13 15:02 GMT
எத்தனை கட்சிகள், அணிகள் வந்தாலும் திமுக கூட்டணியை அசைக்க முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி கூறியுள்ளார்.
திருச்சி:

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வருகிற 22-ந்தேதி தேசம் காப்போம் பேரணி நடைபெறுகிறது. இது தொடர்பாக கிறிஸ்தவ சமுதாயத்தினரின் ஆதரவினை பெறுவதற்காக கட்சி தலைவர்  திருமாவளவன் அவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று திருச்சி வந்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடை முறைப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி வருகிற 22-ந்தேதி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள தேசம் காப்போம் பேரணிக்கு கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த பேராயர்கள், செயலாளர்கள், தலைவர்கள், தலித் கிறிஸ்தவ தலைவர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து இந்த பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகிறோம்.

அந்த வகையில் இன்று திருச்சியில் இன்று டி.இ.எல்.சி.  திருச்சபை பேராயர்கள், சி.எஸ்.ஐ., டி.இ.எல்.சி. அமைப்பின் முன்னணி தலைவர் சார்லஸ் உள்ளிட்ட பேராயர்களை சந்தித்து இந்த பேரணிக்காக அழைப்பு விடுத்தோம். இது அனைத்து சிறுபான்மை சமூகம் மற்றும் ஏழை, எளியோருக்கு எதிரான சட்டம், இதனால் இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள். சிறுபான்மையினர் மட்டுமல்ல. ஆகவே விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த பேரணியை ஒருங்கிணைக்கிறது. இந்த பேரணி வெற்றிகரமாக அமைவதற்கு அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதில் கணிசமான அளவில் மக்கள் பங்கேற்பார்கள். தோழமை கட்சிகளை சேர்ந்த யாரையும் நாங்கள் அழைக்கவில்லை. சிறுபான்மையினருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளோம். இந்த பேரணி கூட்டணி சார்பில் நடத்தப்படுவது அல்ல. எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறமாட்டோம் என பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பிடிவாதம் பிடித்து வருகிறார்கள். ஆனாலும் அதனை திரும்ப பெறும் வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி அறவழியில் போராடும். விடுதலை சிறுத்தைகள் அனைத்து தரப்பு சக்திகளை ஒருங்கிணைக்கும் வகையில் போராடும். தேர்தலை பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. எஞ்சியுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை இணைந்தே சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ரஜினியுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு மழுப்பலான பதிலை கூறியுள்ளது பற்றிய கேள்விக்கு, அது பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார். மேலும் அவர் கூறுகையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை பெறும். எத்தனை கட்சிகள் வந்தாலும், எத்தனை அணிகள் தோன்றினாலும் எங்கள் கூட்டணியை அசைக்க முடியாது என்பதை உறுதி செய்வோம்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை சங்பரிவார் கும்பலுக்கு விழுந்த மிக மோசமான சம்பட்டி அடியாகவே கருதுகிறோம். எங்களை அசைக்க முடியாது என்று மக்களவையில் அமித்ஷா போன்றோர் பேசியதற்கு மக்கள் சரியான அடியை கொடுத்துள்ளார்கள்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான தாக்குதல், ஜாமியா பல்கலைக்கழகத்தில் கட்டவிழ்க்கப்பட்ட தாக்குதல், மாணவர்கள் துப்பாக்கி சூடு நடத்தும் அளவில் சங்பரிவார் அமைப்பின் மதவாத அரசியல் தலை தூக்கியதற்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். இதிலிருந்து பா.ஜ.க. படிப்பினை  கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சர், அண்டை மாநிலங்களான கேரளா, மேற்குவங்காளம், புதுச்சேரி போன்றவற்றில் குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்மோம் என்று துணிச்சலாக அறிவித்தது போல் இங்கும் அறிவிக்க வேண்டும். டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. இது வெறும் அறிவிப்பாக மட்டும் இருந்து விடக் கூடாது. அதனை சட்டமாக இயற்ற வேண்டும். கடலூரில் எண்ணை கிணறு அமைக்கப்போவதாக கூறியுள்ளார்கள். விளை நிலங்கள் பாதிக்காத வகையில் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News